PART -14: இயேசுவே நமது முன்மாதிரி: பவுல் காட்டும் வாழ்க்கை நெறி
அப்போஸ்தலனாகிய பவுல் தனது கடிதங்களில் இயேசுவின் வரலாற்றுச் சம்பவங்களை விரிவாக விவரிக்கவில்லை என்றாலும், கிறிஸ்துவின் பூமியின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். விசுவாசிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இயேசுவையே அவர் முதன்மையான முன்மாதிரியாகக் காட்டுகிறார்.
1. எளிமையின் வடிவம்
இயேசு கிறிஸ்து ஒரு ஏழையாக இந்த உலகில் வாழ்ந்தார் என்பதை பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து… செல்வந்தராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.” (2 கொரிந்தியர் 8:9)
இதையே இயேசுவும் உறுதிப்படுத்தினார்: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” (லூக்கா 9:58). ஆடம்பரத்தைத் தேடாமல் எளிமையை நேசிப்பதே கிறிஸ்துவின் வழி.
2. சாந்தமும் மனத்தாழ்மையும்
கிறிஸ்துவின் குணநலன்களைக் குறிப்பிடும்போது, அவருடைய “சாந்தத்தையும் தயவையும்” பவுல் முன்வைக்கிறார் (2 கொரிந்தியர் 10:1).
“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:29)
சவாலான நேரங்களிலும் மென்மையைக் கடைப்பிடிக்க இயேசுவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
3. மற்றவர்களுக்காக வாழ்தல்
விசுவாசிகள் தங்களுக்குப் பிரியமானதைச் செய்யாமல், மற்றவர்களின் நன்மைக்காக வாழ வேண்டும் என்பதற்குப் பவுல் இயேசுவை உதாரணமாகக் கூறுகிறார்.
“கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்… மற்றவர்களுக்குப் பிரியமாய் நடந்தார்.” (ரோமர் 15:3)
பிலிப்பியர் 2:7-8 வசனங்களின்படி, அவர் தம்மைத் தாமே வெறுமையாக்கி, ஒரு அடிமையின் ரூபமெடுத்து, மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராக வாழ்ந்தார். இது மாற்கு 10:35-45, யோவான் 13:1-17-ல் சொல்லப்பட்டுள்ளது போல, “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும்… வந்தார்” என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.
4. கிறிஸ்துவைப் பின்பற்றுதல் (Mimic)
பவுல் கொரிந்தியர்களிடம் கூறும்போது, “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்களும் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” (1 கொரிந்தியர் 11:1) என்கிறார்.
இங்கு ‘பின்பற்றுதல்’ என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல்லிலிருந்துதான் ‘Mimic’ (அப்படியே செய்தல்) என்ற ஆங்கிலச் சொல் வந்தது. அதாவது, இயேசு எப்படி வாழ்ந்தாரோ, அதைப் பிரதிபலிப்பதே ஒரு கிறிஸ்தவனின் கடமை. தெசலோனிக்கேய விசுவாசிகளும் மிகுந்த உபத்திரவத்திலும் கர்த்தரைப் பின்பற்றி (Mimics) மற்றவர்களுக்கு மாதிரிகளாக விளங்கினார்கள் (1 தெசலோனிக்கேயர் 1:6).
முடிவுரை
பவுல் எழுதிய கடிதங்களை வாசிக்கும்போது, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பூமியின் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இயேசுவின் எளிமை, தாழ்மை மற்றும் பிறருக்குச் சேவை செய்யும் மனப்பான்மை ஆகியவற்றை நம் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதே உண்மையான சீஷத்துவம்.
தொடரும்…….
Bro M.JAYARAJ, 16-02-2026
Credit : The Gospel did Paul and Jesus Agree- Author – Peter Barnes